BREAKING NEWS

Category 5

Category 6

Category 7

Friday, August 9, 2013

30 வகை இஞ்சி - பூண்டு சமையல்

30 வகை இஞ்சி - பூண்டு சமையல்

சுவைக்கு சுவை...ஆரோக்கியத்துக்கு ஆரோக்கியம்...


"என்னவோ தெரியல... பசியே எடுக்க மாட்டேங்குது" - என்றதுமே... "இதை சுடச்சுட சாதத்துல போட்டுச் சாப்பிடு சரியாயிடும்" என்றபடியே அம்மா அரைத்துக் கொடுக்கும் இஞ்சித் துவையல், அடுத்த சில மணி நேரங்களில் 'கபகப'வென பசிக்க வைத்துவிடும்.

''கை, காலெல்லாம் பிடிச்சிக்கிட்ட மாதிரி இருக்கு..." - இப்படிச் சொன்ன அடுத்த நிமிடமே... "வேற ஒண்ணுமில்ல... வாயு பிடிப்பா இருக்கும். இந்தா... இதைச் சாப்பிடு!" என்றபடி உங்கள் பாட்டி, பூண்டு களை லேசாக எண்ணெயில் வதக்கிக் கொடுக்க... சாப்பிட்ட சில மணி நேரங்களிலேயே 'பிடிப்பு' போயிருக்கும்!

இஞ்சி... கர்ப்பிணிகளின் அதிகப்படியான வாந்தியைக் கட்டுப்படுத்தும். பெண்களின் மாதாந்திர வயிற்று வலியைக் குறைக்கும்.

பூண்டு... சிறுநீரில் புரோட்டீன் அளவு அதிகரிப்பதால் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் பிளட் பிரஷரைத் தடுக்கும்; இதயத்தைக் காக்கும், கேன்சர் அபாயத்தைக் குறைக்கும்.

உணவாக உள்ளே போய்... மருந்தாக மாறி இப்படி குணமளிப்பதில் இஞ்சி மற்றும் பூண்டுக்கு இணை... அவையேதான்! அத்தகைய மகத்துவம் வாய்ந்த இஞ்சி மற்றும் பூண்டு ஆகியவற்றில் அசத்தல் ரெசிபிகள்

பின்குறிப்பு: இவற்றை அவ்வப்போது உணவில் சேர்த்தால், உடல் சிக்கென இருக்கும். பிறகென்ன... 'இஞ்சி இடுப்பழகி... பூண்டு பல்லழகி...’ என்று உங்களவர் ரொமான்ஸடிப்பார்... என்ஜாய்!

ஜிஞ்சர் சிரப்!

தேவையானவை: துருவிய இஞ்சி, சர்க்கரை - தலா ஒரு கப், தண்ணீர் - 3 கப், எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், சோடா - ஒரு கப்.

செய்முறை: துருவிய இஞ்சியுடன் 3 கப் தண்ணீர் சேர்த்து வேக விடவும். அதில் சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். கொதிக்க ஆரம்பித்தவுடன் 5 நிமிடம் அடுப்பை 'சிம்’மில் வைத்து, இறக்கி ஆற விடவும். அதனை அரை மணி நேரம் கழித்து வடிகட்டி, சுத்தமான பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைக்க... ஜிஞ்சர் சிரப் ரெடி!

தேவைப்படும்போது 2 டேபிள்ஸ்பூன் சிரப், அரை டம்ளர் சோடா, அரை டம்ளர் தண்ணீர், ஒரு டேபிள்ஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்த்து, நன்கு கலந்து பரிமாறவும்.
இஞ்சிப் பச்சடி

தேவையானவை: இஞ்சி - 50 கிராம், தேங்காய் துருவல் - ஒரு கப், பச்சை மிளகாய் - 2, சீரகம் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, தயிர் - ஒரு கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: சுத்தம் செய்த இஞ்சி, தேங்காய் துருவல், பச்சை மிளகாயை மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும், அதில் உப்பு சேர்த்து தயிருடன் கலக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து, கறிவேப்பிலை சேர்த்து, தயிர் கலவையுடன் கலக்கிப் பரிமாறவும்.

பூண்டு வெஜ் ரைஸ்

தேவையானவை: சாதம் - ஒரு கப், பச்சை மிளகாய் - 6, பூண்டுப் பல் - 6, நறுக்கிய கேரட், பீன்ஸ், பட்டாணி (கலந்தது) - ஒரு கப் , வெங்காயம் - 1 (நறுக்கிக் கொள்ளவும்), பட்டை, கிராம்பு, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: சாதத்தை உதிராக வடித்துக் கொள்ளவும். பச்சை மிளகாய், பூண்டு இரண்டையும் விழுதாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, பட்டை, கிராம்பு, ஏலக்கய்த்தூள் தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். இதனுடன் காய்கறிகளைச் சேர்த்து, உப்பு போட்டு வேக விடவும். வெந்தவுடன், அதில் சாதத்தை சேர்த்துக் கிளறி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.இஞ்சித் தீயல்

தேவையானவை: பொடியாக நறுக்கிய இஞ்சி, தேங்காய் துருவல் - தலா ஒரு கப், சின்ன வெங்காயம் - 10, பச்சை மிளகாய் - 2, மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், வெந்தயத்தூள் - தலா கால் டீஸ்பூன், புளி - ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு, வெல்லம் - சிறிய துண்டு, நல்லெண்ணெய் - அரை கப், கடுகு, உளுத்தம்பருப்பு - கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு இஞ்சி, தேங்காய் துருவலை வதக்கி. கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். புளியைக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். கடாயில் மீதி எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளித்து, வட்டமாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இதனுடன் மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், வெந்தயத்தூள் சேர்க்கவும். அதில் புளிக் கரைசல், உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். பின்பு அரைத்த இஞ்சி - தேங்காய் விழுதை சேர்த்து, நன்கு சுருள கிளறவும். எண்ணெய் பிரிந்து வரும்போது பொடித்த வெல்லம் சேர்த்து, கிளறி இறக்கவும். ஒரு மாதம் வரை கெடாமல் வைத்து உபயோகிக்கலாம்.

சாதத்தில் போட்டுச் சாப்பிட சுவையாக இருக்கும்.

பூண்டு ஊறுகாய்

தேவையானவை: உரித்த பூண்டு - ஒரு கப், எலுமிச்சைச் சாறு - கால் கப், தனியா, வெந்தயம் - தலா 2 டேபிள்ஸ்பூன், சீரகம் - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - 3 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், நல்லெண்ணெய் - அரை கப், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெறும் கடாயில் வெந்தயம், தனியா, சீரகத்தை வறுத்துப் பொடிக்கவும். கடாயில் கால் கப் எண்ணெய் விட்டு, உரித்த பூண்டைப் போட்டு நன்கு வதக்கவும். பூண்டு வதங்கியவுடன், மஞ்சள்தூள், உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறவும். அதனுடன் எலுமிச்சைச் சாறு, பொடித்த தூளை சேர்க்கவும். மீதமுள்ள கால் கப் எண்ணெயைச் சேர்த்து, சுருள வதக்கி, ஆறியவுடன் சுத்தமான பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
இஞ்சி சட்னி

தேவையானவை: இஞ்சி - 10 கிராம், காய்ந்த மிளகாய் - 8, புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: நறுக்கிய இஞ்சி, காய்ந்த மிளகாயை வெறும் கடாயில் வறுத்துக் கொள்ளவும். இதனுடன் உப்பு, புளி சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைக்கவும். கடாயில் நல்லெண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து கறிவேப்பிலை சேர்த்து சட்னியுடன் கலக்கவும். விருப்பப்பட்டால் சிறிது வெல்லம் சேர்க்கலாம். இது இட்லி, தோசை, வடை, பஜ்ஜிக்கு சுவையான ஜோடி!

இஞ்சி ரசம்

தேவையானவை: இஞ்சி - 3 அங்குலத் துண்டு, பச்சை மிளகாய் - 2, எலுமிச்சம்பழம் - 1, வேக வைத்த துவரம்பருப்பு - கால் கப், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா ஒரு சிட்டிகை, மிளகுத்தூள், சீரகத்தூள் - கால் டீஸ்பூன், கடுகு-கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பாத்திரத்தில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி, கீறிய பச்சை மிளகாய், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், நசுக்கிய இஞ்சி சேர்த்து கொதிக்க விடவும். ஒரு டம்ளர் அளவுக்கு வற்றியவுடன், அதில் வேக வைத்த துவரம்பருப்பை நீர்க்க கரைத்து சேர்த்து, உப்பு போட்டுக் கொதிக்க விடவும். பொங்கி வரும்போது மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்க்கவும். மீண்டும் பொங்கியதும், இறக்கி எலுமிச்சம்பழம் பிழியவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும். கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

சளி, இருமல், அஜீரணம், பசியின்மை போன்ற குறைபாடுகளை போக்கும் இந்த ரசம்.பூண்டு-இஞ்சி சூப்

தேவையானவை: பூண்டுப் பல் - 10, இஞ்சி - ஒரு அங்குலம் நீளமுள்ள துண்டு, வெங்காயம் - 1, நெய், சோள மாவு - தலா ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, நறுக்கிய வெங்காயத்தாள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் நெய் விட்டு, பூண்டு, நறுக்கிய இஞ்சி, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் 2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். 10 நிமிடம் கழித்து அதனை இறக்கி, ஆற வைத்து. வடிகட்டவும்.

பூண்டு, இஞ்சி, வெங்காயத்தை மிக்ஸியில் அரைக்கவும். வடிகட்டிய தண்ணீருடன் மேலும் 2 கப் தண்ணீர் ஊற்றி, அரைத்த விழுதுடன் சேர்க்கவும். சோள மாவைக் கரைத்து அதில் சேர்த்துக் கொதிக்க விடவும். மஞ்சள்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து மேலும் கொதிக்க விடவும். பிறகு இறக்கி, நறுக்கிய வெங்காயத்தாள் தூவி பரிமாறவும்.

பூண்டு ரசம்

தேவையானவை: பூண்டுப் பல் - 6, புளி - ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, ரசப்பொடி- கால் டீஸ்பூன், மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா அரை டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்த மல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: புளியைக் கரைத்து வடிகட்டவும். கடாயில் புளிக் கரைசல், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், ரசப்பொடி, உப்பு சேர்த்து சூடாக்கவும். பூண்டைத் தட்டி, அதில் சேர்க்கவும். கொதிக்க ஆரம்பித்தவுடன் மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து அடுப்பை 'சிம்’மில் வைத்து கொதிக்க விடவும். ரசம் நுரைத்து வரும்போது கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவவும். இன் னொரு கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்புதாளித்து, ரசத்தில் கொட்டி இறக்கவும்இஞ்சிக் குழம்பு

தேவையானவை: இஞ்சி - 3 அங்குலத் துண்டு, சின்ன வெங்காயம் - 20, புளி - ஒரு எலுமிச்சம்பழம் அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், வெந்தயம் - தலா கால் டீஸ்பூன், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன், தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: புளியைக் கரைத்துக் கொள்ளவும். இஞ்சியைக் கழுவி, சிறிய துண்டுகளாக நறுக்கவும். சின்ன வெங்காயத்தை இரண்டிரண்டாக நறுக்கவும். கடாயில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், சீரகம், கறிவேப்பிலை தாளித்து இஞ்சி, வெங்காயம் சேர்த்து வதக்கவும். வதங்கியவுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், பெருங்காயத்தூள் சேர்க்கவும். அதில் புளிக் கரைசல், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். கெட்டியாக வரும்போது ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு இறக்கவும்.

இந்தக் குழம்பு, சூடான சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

பூண்டுக் குழம்பு

தேவையானவை: உரித்த பூண்டு - கால் கப், புளி - ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு, மிளகாய்த்தூள் - ஒன்றரை டேபிள்ஸ்பூன், தனியாத்தூள் - 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா ஒரு சிட்டிகை, கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம் - தலா கால் டீஸ்பூன், சின்ன வெங்காயம் - 5, கறிவேப்பிலை - சிறிதளவு, நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன். உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து, பூண்டை சேர்த்து வதக்கவும். இதனுடன் நறுக்கிய சின்ன வெங்காயம், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்துக் கிளறவும். பிறகு மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்க்கவும். புளியைக் கரைத்து அதில் ஊற்றி, உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். குழம்பு நன்கு கொதித்து, எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கி விடவும். விருப்பப்பட்டால் சிறிதளவு வெல்லம் சேர்க்கலாம்.

இஞ்சி டீ

தேவையானவை: இஞ்சி - சிறிய துண்டு, டீத்தூள் - 2 டீஸ்பூன், தேன் - 2 டீஸ்பூன், தண்ணீர் - 2 கப்.

செய்முறை: 2 கப் தண்ணீரில் இஞ்சியைத் தட்டிப் போட்டு கொதிக்க விடவும். கொஞ்சம் வற்றியவுடன், டீத்தூள் சேர்த்து கொதித்து வரும்போது அடுப்பை அணைத்து, பாத்திரத்தை மூடவும். 3 நிமிடம் கழித்து, வடிகட்டி, தேன் சேர்த்து கலக்கிக் குடிக்கவும்.

இதற்கு பால் தேவையில்லை. புத்துணர்ச்சி தரும் சுவையான டீ இது!திடீர் பூண்டு மிளகாய்ப்பொடி

தேவையானவை: பூண்டுப் பல் - 5, மிளகாய்த்தூள் - 3 டேபிள்ஸ்பூன், நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பூண்டை தோலுடன் நசுக்கி, மிளகாய்த்தூளுடன் சேர்த்துக் கலக்கவும். இதனுடன் உப்பு சேர்த்தால், திடீர் பூண்டு மிளகாய்பொடி ரெடி!

நல்லெண்ணெய் விட்டுக் கலந்து சூடான இட்லி, தோசைக்குத் தொட்டுக் கொள்ளலாம்

இஞ்சித் தொக்கு

தேவையானவை: இஞ்சி - கால் கிலோ, பூண்டுப் பல் - 20, காய்ந்த மிளகாய் (வறுத்து அரைக்க) - 15, புளி - எலுமிச்சம்பழம் அளவு, வெல்லம் - சிறு துண்டு, பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன், வெந்தயத்தூள் - ஒரு டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் (தாளிக்க) - 2, கறிவேப்பிலை. நல்லெண்ணெய் - கால் கப், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: இஞ்சியை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாயை நன்கு வறுக்கவும். அதனுடன் புளி, உப்பு சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளித்து, அரைத்த விழுதைச் சேர்த்துக் கிளறவும். இத்துடன் பெருங்காயத்தூள், வெந்தயத்தூள், வெல்லம் சேர்க்கவும். எண்ணெய் மிதந்து வரும்வரை அடுப்பை 'சிம்’மில் வைத்து நன்கு வதக்கவும். ஆறியவுடன், எடுத்து பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளவும்.

இது, ஈரம் படாமல் இருக்கும் வரை கெட்டுப் போகாது! தயிர் சாதத்துக்கு சிறந்த காம்பினேஷன்

பூண்டு பால் கஞ்சி

தேவையானவை: புழுங்கல் அரிசி - ஒரு கப், பூண்டுப் பல் - 12, வெந்தயம், சீரகம் - தலா கால் டீஸ்பூன், சுக்கு, சித்தரத்தை - ஒரு சிறிய துண்டு, திப்பிலி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு,

செய்முறை: அரிசியை நன்கு கழுவி குக்கரில் போடவும். ஒரு கப் அரிசிக்கு மூன்றரை கப் தண்ணீர் ஊற்றவும். இதனுடன் உரித்த பூண்டு, சீரகம், வெந்தயம், உப்பு சேர்க்கவும். சுக்கு, சித்தரத்தை, திப்பிலியை ஒரு துணியில் கட்டி, குக்கரில் போடவும். கஞ்சி வெந்த பின்பு துணியை வெளியே எடுத்து விடவும். வெந்த கஞ்சியில் தேவைக்கேற்ப பால் சேர்த்துப் பரிமாறலாம்.

மழைக்காலத்துக்கேற்ற ஆரோக்கியமான கஞ்சி இது. சளி, இருமலைக் கட்டுப்படுத்தும்.

இஞ்சி முரப்பா

தேவையானவை: இஞ்சி - கால் கிலோ, வெல்லம் - கால் கிலோ.

செய்முறை: இஞ்சியை நறுக்கி மிக்ஸியில் அரைத்து சாறெடுத்துக் கொள்ளவும். வெல்லத்தை தண்ணீரில் கரைத்து வடிகட்டி, கொதிக்க விடவும். இதனுடன் தெளிந்த இஞ்சிச் சாற்றை சேர்த்து, தொடர்ந்து கிளறவும். ஒட்டாமல், அல்வா பதத்துக்கு வரும்போது இறக்கித் தட்டில் கொட்டி, ஆற விட்டு வில்லைகளாகப் போடவும்.

வெல்லத்துக்குப் பதில் சர்க்கரையிலும் செய்யலாம்.
பூண்டு-உளுந்து சாதம்

தேவையானவை: புழுங்கல் அரிசி - ஒரு கப், கறுப்பு முழு உளுந்து - அரை கப், சீரகம் - ஒரு டீஸ்பூன், பூண்டுப் பல் - 10, தேங்காய் துருவல் - கால் கப், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெறும் கடாயில் கறுப்பு உளுந்தை வாசனை வரும் வரை வறுக்கவும். உளுந்தை தோல் நீங்கிக் கழுவி, அரிசியுடன் சேர்த்து குக்கரில் போட்டு, தேவையான தண்ணீர் ஊற்றவும். இதனுடன் உப்பு, சீரகம், பூண்டு, தேங்காய் துருவல் சேர்த்துக் கலக்கவும். முதல் விசில் வந்ததும், அடுப்பை சிம்மில் வைத்து 15 நிமிடம் வேக வைத்தால், உளுந்து சாதம் ரெடி!

இதற்குத் தொட்டுக்கொள்ள எள்ளுத் துவையல் நல்ல காம்பினேஷன். இது இடுப்பு எலும்பை பலப்படுத்தும். வளரும் பெண் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.தேன் இஞ்சி

தேவையானவை: இஞ்சித் துண்டுகள் - ஒரு கப், தேன் - கால் கப்.

செய்முறை: இஞ்சியை சுத்தம் செய்து, சிறு துண்டுகளாக்கி ஆவியில் வேக வைக்கவும். பிறகு ஈரம் போகும் வரை இஞ்சியை ஆற விட்டு, தேனில் போட்டு வைக்கவும். குழந்தைகளுக்கு இதனை தினமும் ஒரு துண்டு கொடுத்து வர... பசியின்மை, அஜீரணம் ஏற்படாது. ஈரத்துடன் இஞ்சியை தேனில் போடக்கூடாது.

பூண்டு-மஷ்ரூம் கிரேவி

தேவையானவை: பட்டன் காளான் - 100 கிராம், வெங்காயம், தக்காளி - தலா 1, பூண்டுப் பல் - 10, சோம்பு - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன், தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, சோம்பு தாளித்து, நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்த்து மீண்டும் வதக்கவும். இதனுடன் சுத்தம் செய்த காளானை சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து வேக விடவும். சிறிது வெந்தவுடன், நசுக்கிய பூண்டைச் சேர்க்கவும். பிறகு, உப்பு சேர்க்கவும். கிரேவி பதத்துக்கு வந்ததும், நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கவும்.

இது, சப்பாத்தி, பூரி, வெஜிடபிள் ரைஸ§க்கு சிறந்த சைட் டிஷ்.
ஜிஞ்சர் ஃப்ரூட் பஞ்ச்

தேவையானவை: இஞ்சி - 8 அங்குலத் துண்டு, சர்க்கரை, எலுமிச்சைச் சாறு - தலா ஒரு கப், ஆரஞ்சு சாறு - 2 கப், இஞ்சி துருவல் - சிறிதளவு, குளிர்ந்த நீர் - 3 கப்.

செய்முறை: இஞ்சியைத் தட்டி, சர்க்கரை சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க விடவும். கொதி வந்தவுடன், அடுப்பை 'சிம்’மில் வைத்து, மூடாமல் மேலும் 15 நிமிடம் கொதிக்க விடவும். பிறகு இறக்கி வடிகட்டி, ஆற விடவும். அதில் எலுமிச்சைச் சாறு, ஆரஞ்சு சாறு கலந்து குளிர்ந்த நீர் சேர்த்துக் கலக்கி டம்ளரில் ஊற்றி, மேலாக இஞ்சி துருவல் போட்டுக் கொடுக்கவும்.

பூண்டு-கடலைப்பருப்பு துவையல்

தேவையானவை: கடலைப்பருப்பு - கால் கப், காய்ந்த மிளகாய் - 6, பூண்டுப் பல் - 5, புளி - ஒரு சிறு நெல்லிகாய் அளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெறும் கடாயில் கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், பூண்டு ஆகியவற்றை வறுக்கவும். இதனை ஆற வைத்து மிக்ஸியில் போட்டு புளி, உப்பு சேர்த்து அரைக்கவும்.

தயிர் சாதம், ரசம் சாதத்துக்கு தொட்டுக்கொள்ள ஏற்ற துவையல் இது.
ஜிஞ்சர் வெஜ் ஃப்ரை

தேவையானவை: துருவிய இஞ்சி - 2 டேபிள்ஸ்பூன், பட்டாணி - கால் கப், கேரட் - 1 (பொடியாக நறுக்கவும்), வெங்காயம் - 1, புருக்கோலி பூ - 1, சோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு,

செய்முறை: சோள மாவுடன் உப்பு, துருவிய இஞ்சி, ஒரு டீஸ்பூன் எண்ணெய், சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கலக்கவும். இந்தக் கலவையில் கேரட், பட்டாணி, உதிர்த்த புருக்கோலி பூ சேர்த்து கலக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். இதனுடன் காய்கறிக் கலவையைச் சேர்த்துக் கிளறவும். மிதமான தீயில் மூடி வைத்து வேக விடவும். வாசனை வந்ததும் இறக்கிப் பரிமாறவும்.

பூண்டு-காய்கறி சூப்

தேவையானவை: பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு (கலந்தது) - ஒரு கப், பூண்டுப் பல் - 6, மிளகு, சீரகத்தூள், வெண்ணெய் - தலா கால் டீஸ்பூன். உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கை இரண்டு கப் தண்ணீரில் வேக விடவும். வெந்தவுடன் நசுக்கிய பூண்டு, மிளகு, சீரகத்தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். 3-4 நிமிடங்கள் கழித்து, அடுப்பிலிருந்து இறக்கி வெண்ணெய் சேர்த்துப் பரிமாறவும
http://pettagum.blogspot.in/


Post a Comment

 
Copyright © 2013 சமையல் குறிப்புக்கள்
Shared by WpCoderX